இலக்கியம்

இலக்கியம் சார் பதிவுகள்.

கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க!

கூடுமன்பினிற் கும்பிடலேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கியவர்கள் நமது மெய்யடியார்கள். அவர்கள் இறைவனோடு கொண்டுள்ள தொடர்பையும் பல பல பாங்குகளில் வைத்துக்காட்டுகின்றன நமது அருள் நூல்கள். திருமுறைகளத்தனையும் இறைவனிடத்திலிருந்து மெய்யடியார்கள் அடைந்த அனுபவத்தை நமக்குக் காட்டுகின்றன. திருமுறைகளுள்ளும் திருவாசகம் ஒரு தனிச்சிற்ப்பு வாய்ந்தது. மணிவாசகப்பெருமான் ஆண்டான் அடிமைத் தொடர்பின் நெருக்கத்தைக் காட்டி அழுது அழுது எம்பெருமானிடம் அருள்பெற்று உய்ந்தவராவார்.

உலகத்திலே அறிவுடைப்பொருட்களை நோக்கும்போது இறைவன் அவற்றை ஆளும் இயல்புடைமையால் ஆண்டான் ஆகின்றான். அவையனைத்தும் அடிமையாகின்றன. இது பொதவானவொரு உண்மையாகும். இங்கே சிறப்பாக மணிவாசகப்பெருமானுடைய ஆண்டான் அடிமைத்தொடர்பைக் கவனித்தால் இறைவனே குருமணியாக அதாவது ஞானாசாரியனாக எழுந்தருளி ஆட்கொண்டமையை யாவரும் அறிவர்.

நான் தனக் கன்பின்மை நானுந் தானுந் தாமறிவோம்
தான் என்னை ஆட்கொண்டது எல்லாருந் தாமறிவர்

என்று மணிவாசகம் காட்டுகின்றது. இனித் திருவாசகத்தின் தொடக்கத்திற்கு வருவோம்.

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க
கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க

என்னும் மூன்றடிகளிலே தனக்குக் கிடைத்த காட்சி, ஆன்மநாதனாகிய இறைவன் ஆன்மாவை ஆட்கொள்வதற்காகச் செய்த அருட்செயல்கள் என்பவற்றைக் காட்டுகின்றார்.

கோகழி யென்றது திருப்பெருந்துறையென்று ஒரு சாராரும் திருவாடுதுறை யென்று ஒருசாராரும் வாதிப்பர். இறைவனுடைய காட்சி அடிகளுக்கு முதலில் திருவுத்தர கோசமங்கையிலேயே ஏற்பட்டதென்றும் அவ்வுத்தர கோசமங்கை வேடத்தையே திருப்பெருந்துறையின் கண்ணும் கண்டனர் என்றும், அதன்மேற் பல தலங்களையும் தரிசித்து வருகையிலே திருவாடுதுறையில் சூக்கும பஞ்சாட்சரம் உபதேசிக்கப்பட்டது என்றும் கூறுவர். எனினும் அடிகளின் வரலாற்றின் படி கோகழியென்பது திருப்பெருந்துறையென விளங்கக்கிடக்கின்றது.

கோ – பசுத்துவம், கழி – கழிய ஆட்கொண்ட குருமணியென்பதும் பொருந்துவதே. பசுத்துவம் என்பது ஆனமபோதத்தால் அறியும் அறிவு. ஆன்மபோதத்தால் அறியும் அறிவனயாவும் அழியும் இயல்பின. ஆகவே நித்தியமான இறைவனை உணர்வதற்குச் சிவபோதமே தேவை. இதனையே பதிஞானம் என்பர். பாசஞானம், பசுஞானம் என்பவை கருவிகளோடு கூடியறியும் அறிவு. பதிஞானம் என்பது அவனருளே கண்ணாகக்காணும் அறிவு. இறைவனுடைய அகண்ட வடிவம் சுட்டறிவினால் அறியப்படாதது.

அவனருளே கண்ணாகக் கணினல்லால் இப்படியன்
இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் இவனிறைவன்
என் றெழுதிக் காட்டொணாதே

என்று பாடுகிறார் அப்பர்.

திருப்பெருந்துறையிலே பசுத்தவம் கழிந்ததும் அடிகள் தன் செயலற்று எல்லாம் சிவன் செயலாக நின்றார். “ஊன்கெட்டு உயிர்கெட்டு உணர்வு கெட்டு என்னுள்ளமும் போய் நான் கெட்ட வாபாடித் தௌ்ளேணங் கொட்டாமோ” என்னும் திருவாசகமும் இதனை வலியுறுத்துகின்றது.

இனிக் குருமணி யென்பதைக் கவனிப்போம். உயிரகள் எல்லாம் பாசத் தொடர்புடையவை. பாச நீக்கம் பெற வேண்டுமாயின் குருவருள் வேண்டும். குருவின் உபதேசமே உயிர் நோய்க்கு மருந்து. குழந்தை யொன்று பிறந்தாலொழிய ஒரு தாயிடத்திலே முலைப்பால் தோன்றாது. அதுபோல ஞானாசிரியன் வந்து தோன்றினாலொழிய ஆன்மாவுக்கு ஞானம் தோன்றாது. ஐம்புலவேடரின் அயர்ந்து வளரும் உயிரைக் குருவாகி வந்து ஆட்கொள்ளுகிறான் இறைவன் என்பதை மெய் கண்டார்,

ஐம் புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்திவிட்
டன்னியமின்மையில் அரன் கழல் செலுமே

என விளக்குகிறார்.

அவன் ஒரு அரசனின் மகன். வேட்டைக்குச் சென்ற போது இளமையிலேயே அவன் வேடர் கைப்பட்டுவிட்டான். வேடர்களோ ஐந்துபேர். இவன் ஒருவன். வளர்ந்தான். ஆனால் தான் வேடனேயென்ற நினைப்புடனேயே வளர்ந்தான். வேடனென்ற உணர்வோடு இருக்கிறவனுக்கு வேந்தனென்ற உணர்வைக் கொடுக்க இன்னொருவன் வரவேண்டுமே. அரசன் ஒரு நாள் கானகம் சென்று நீ என் மகன் என்று அறிவுறுத்துகின்றான். அவனும் அரசனாகிறான். இதே போலத் தான் குருவருள் திறம் கைகூடும் என்பர்.

உயிர் ஐம்புல வேடர் வயப்பட்டுச் சுழல்கிறது. உண்மையான தலைவன் யார் என்பதை அறியும் ஆராய்ச்சி ஞானம் அதற்கில்லை. எனினும் பந்தமகன்ற நிலையில் இறைவனே அருட்குருவாக வந்து ஆன்மாவின் மலமகற்றி ஆட் கொள்ளும் நிலை யேற்படுகிறது. இருளை மாற்றுகிறது இரவி மருளை மாற்றுகிறது குரு. குருமணி யென்றால் அறியாமை இருட் கண் ஒளி காட்டி நிற்கும் மாணிக்கம் என்பது பொருள் மாணிக்கக் கல் பேரொளி வாய்ந்தது.

ஈறிலாத நீ எளியை யாகி வந்து ஒளிசெய்
மானிடம் ஆக நோக்கியும்

என்று கூறுகின்றார். மானிட வடிவிலே வந்தாலும் அங்கே தெய்வ ஒளி கலந்திருந்ததற்கு “ஒளிசெய் மானிடம்” என்றார். “நோக்கியும்” என்பதிலிருந்து குருவினிடம் இருந்து பெற்ற நயனதீட்சையை விளக்குகிறார். “அங்கணர் கருணைகூர்ந்து அருட்திரு நோக்கமெய்த” என்பது கண்ணப்பர் புராணம்.

குருமணியால் அடிகளுக்குக் காட்டப்பட்ட நெறி மணி நெறி. மணி நெறியில் நின்று அவரருளிய வாசகம் மணிவாசகம். மணிவார்த்தையென்பதும் அதுவே. “வாக்குன் மணிவார்த்தைக் காக்கி” என்பது திருவாசகம். மாணிக்க வாசகர் என்பதும் இதனை உள்ளடக்கியே யாகும். ஆகவே குருவாய் இறைவனே எழுந்தருள வேண்டும் என்பதும் தீவிரதர பக்குவ நிலை கண்டு சத்திகிபாதம் அப்போ நிகழும் என்றும் மணிவாசகர் இந்த நிலையிலேயே ஆட்கொள்ளப்பட்டார் என்றும் உணரக்கிடக்கிறது. “குருவாய் வருவாய் குகனே” என்கிறார் அருணகிரியார்.

இருவினை நேரொப்பின் இன்னருட்சக்தி
குருவென வந்து குணம்பல நீக்கத்
தருமென ஞானத்தால் தன் செயலற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவனாமே

எனவே திருப் பெருந்துறையிலே குருந்த மர நீழலிலே இறைவனால் ஆட்கொள்ளப்பட்டமையையும் அங்கே பசுத்துவம் கழிந்து சிவத்துவம் செறியப்பட்டமையையும் குறித்துத் திரு வாசகத்தின் தொடக்கமே எம்பெருமானுக்கு வாழ்த்தாக அமைந்துள்ளது. நாமும் மணிவாசகர் காட்டிய நெறியிலே எம்பெருமானை வாழ்த்தி வணங்குவோமாக.

இக்கட்டுரையானது பண்டிதை சைவப்புலவர் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களாலே எழுதப்பெற்று ஒரு சஞ்சிகையில் ஏறத்தாள முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னே வௌியாகியது. எச்சஞ்சிகை என்பதும் எப்போதென்பதும் சரியாக நினைவிலில்லை.

4 ஆவணி, 2011

தமிழ்தந்த தாமோதரம்பிள்ளையின் பரமோபகாரம் – தொடர்கிறது…

தமிழ்தந்த தாமோதரம்பிள்ளையின் பரமோபகாரம் பகுதி ஒன்றிலிருந்துதொடர்கிறது.

மதுரைத் தமிழச்சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திராசிரியர் இராமானுஜையங்கார் அவர்கள், “சென்னை நார்மல்ஸ் ஸ்கூல் தலைமைத் தமிழ்ப் புலவர் கோமளபுரம் இராசகோபாலபிள்ளையால் பரிசோதித்து, மு. கந்தசாமி முதலியார் வர்த்தமானதரங்கிணீசாகை அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது” என்ற முகப்புடன் ஒரு சேனாவரையம் தம்மிடம் இருக்கின்றது என்று தெரிவிக்கின்றார்கள். அந்த இராசகோபாலப்பிள்ளை பதிப்பு “எப்பொழுது பதிப்பிக்கப்பட்டது என்று கேட்டபோது, (1868) விபவ ௵ கார்த்திகை ௴ என்று அம்முகப்பில்தானே குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்கின்றார்கள். இராசகோபாலப்பிள்ளை பதிப்பு ஒன்று இருக்கவேண்டும் என்பவர்களுக்கு, இது மகிழ்ச்சிக்குரிய ஒரு சம்பவமேயாயினும், “தாமோதரம்பிள்ளை பதிப்புக்கு முன் இராசகோபாலப்பிள்ளை பதிப்பித்திருக்க வேண்டும்” என்று மனப்பால் குடிக்கின்றவர்களுக்கு, மெல்ல வாயை மெல்லுதற்கோ – மகிழ்ச்சி கொள்ளுதற்கோ இடமேயில்லை. தாமோதரம்பிள்ளை பதிப்பு இரண்டு மாதங்களுக்கு முன் (1986) விபவ வருஷம் புரட்டாதியிற் பதிப்பிக்கப்பட்டுவிட்டது. ஆகவே, இராசகோபாலப்பிள்ளை சேனாவரைய பதிப்பு பதித்தால் அது ஏடுகளை பரிசோதித்துப் பதித்த பதிப்பு என்று சொல்ல முடியாது. 1906ல் மதுரைச்சங்கத்தில் படித்த கோபாலையர் என்பவர் “சேனாவரைய ஆராய்ச்சி” என்று ஒரு கட்டுரை “செந்தமிழ்”ப் பத்திரிகையில் எழுதியிருக்கின்றார். அந்தக்கட்டுரை தாமோதரம்பிள்ளை பதிப்பிலும் பார்க்க, ஒரு சில திருத்தம் சொல்லி இராசகோபாலப்பிள்ளை பதிப்பை பாராட்ட முயற்சிக்கின்றது. ஆனால், இராசகோபாலப்பிள்ளையும் சேனாவரையம் பதித்திருக்கின்றார் என்று அறுதியிட்டுக்கூறாது, “இராசகோபாலப்பிள்ளை பதிப்புப் புத்தகம்” என்று கருகல் செய்து நடக்கின்றது. இக்கருகலாலும், அரசாங்க புத்தகப்பதிவில் இராசகோபாலப்பிள்ளை பெயரால் சேனாவரையப்பதிப்பு இல்லாமையாலும், இராசகோபாலப்பிள்ளை திருட்டு பிரசித்தமாகையாலும், தாமோதரம்பிள்ளை பதித்து இரண்டு மாசத்துக்கிடையில் திடீரென்று தோன்றினமையாலும், தமிழ்நாட்டில் ஏட்டுப்பிரதி கிடைத்தாலும், இராசகோபாலப்பிள்ளை பதிப்பு கிடையாமையாலும், தாமோதரம்பிள்ளை முதலிய யாழ்ப்பாணத்து அறிஞர்களில் இராசகோபாலப்பிள்ளைக்கு மாற்சரியம் உண்மையாலும், திரு. இராமானுஜையங்கார் அவர்களிடமிருக்கும் இராசகோபாலப்பிள்ளை பெயராலுள்ள சேனாவரையம், “புதிய பதிப்புத்தானோ, தாமோதரம்பிள்ளை பதிப்புச் சிலதாள்கள் வேறுபட்டுத் தோற்றுந் தோற்றமோ” என்பதை அறிஞர்கள் ஊகிக்கக் கடவர்கள். எங்ஙனமாயினும், என்னைப் பொறுத்தவரையில், இராசகோபாலப்பிள்ளைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். ஏனென்றால் தாமோதரம்பிள்ளை பதிக்குமுன், தாம் பதித்ததாகக் காலத்தை முன்னுக்குத் தள்ளாமல், எக்காரணத்தினாலோ, (தாமோதரம்பிள்ளை பதிப்பில் பிழை காண்பான் போலும்) தம் பதிப்பை காலத்தால் பின்னுக்குத் தள்ளியதற்காக நன்றி செலுத்த வேண்டாமா! என்கின்றேன். இராசகோபாலப்பிள்ளை வாழ்க.

அதே விபவ ௵ (1868) கார்த்திகை ௴ மற்றொரு தொல்காப்பியப்பதிப்பு வௌிவந்தது. அது தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை. இதனை பதித்தவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் மாணவர் சுப்புராயச் செட்டியார் அவர்கள். எழுத்ததிகாரம் இளம்பூரணத்தை ஏட்டிலிருந்து எடுத்து முதன்முதல் அச்சில் கொணர்ந்தவர்கள் செட்டியார் அவர்களே.

தமிழ்நாடு, தொல். எழுத்தையும் சொல்லையும், எழுத்துக்கு நச்சினார்க்கினியம் இளம்பூரணம் என்கின்ற உரைகளையும், சொல்லுக்குச் சேனாவரையத்தையும் பெற்றுக்கொண்டது. இவற்றை முதன்முதற் பதித்த பெருமக்களை காலக்கிரமம் செய்தால், மழவை மகாலிங்கையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, சுப்புராயச் செட்டியார் என்றே கிரமஞ்செய்ய வேண்டும். எழுத்தையும் அதற்கு நச்சினார்க்கினியத்தையும் முதன்முதல் அச்சில் தந்த பெருமை மகாலிங்கையருக்குரியது. அவ்வாறே சொல்லையும் அதற்குச் சேனாவரையத்தையும் முதன்முதல் அச்சில் தந்த பெருமை சி. வை. தாமோதரம்பிள்ளைக்குரியது. எழுத்துக்குரிய இளம்பூரணத்தை முதன்முதல் அச்சில் தந்த பெருமை சுப்புராயச் செட்டியார்க்குரியது. சந்தேகப்பேர்வழியான இராசகோபாலப்பிள்ளைக்குப் பதிப்பாளர் நாமாவலியில் இடங்கொடுக்க இடமில்லை. அப்படிக்கொடுப்பினும் முதன்முதல் அச்சில் தந்த பெருமை அவருக்கு கிடையவே கிடையாது. இல்லையே இல்லை! இராசகோபாலப்பிள்ளையின், அரசாங்க பதிவு புத்தகத்தை ஏமாற்றிய கள்ளச் சேனாவரையப் பதிப்புக் காலம் (1868) விபவ ௵ கார்த்திகை ௴. தாமோதரம்பிள்ளையின் அரசாங்க பதிவுப்புத்தகத்தை ஏமாற்றாத களவில்லாத சேனாவரையப் பதிப்புக் காலம் (1868) விபவ ௵ புரட்டாதி ௴. இரண்டு மாதங்கள் முந்தி.

மழவை மகாலிங்கையர் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் பதித்து இருபது வருஷங்களுக்குப் பிறகு, சுப்பராயச் செட்டியார் (1868) விபவ ௵ கார்த்திகை ௴ எழுத்து இளம்பூரணம் அச்சிற் பதிக்க இரண்டு மாசங்களுக்கு முன், அஃதாவது இற்றைக்கு 80 வருஷங்களுக்கு முன்னமே,

இந்தப்பூமண்டலத்திலே, தமிழ்நாட்டிலே தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையத்தை, “தமிழ்நாட்டிலே தமக்கிணையில்லாத” ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களை கொண்டு பரிசோதிப்பித்து, முதன்முதல் அச்சுவாகனத்தில் ஆரோகணிப்பித்தவர்கள் தமிழ்மகார் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களே! ஒரு மயிர் நுனியை கோடாநுகோடி கூறிட்டு, அக்கூறுகளிலே, ஒரு கூறாகிய ஒரு மயிர்நுனி சந்தேகமும் இதில் இல்லையே இல்லை! இஃதிங்யனமாக,

எழுத்து சொல் பதித்தவர்கள் நாமாவலியை,

“மழவை மாகலிங்கையர், சுப்புராயச்செட்டியார், இராசகோபாலப்பிள்ளை, சி. வை. தாமோதரம்பிள்ளை”

ஏன்று வரிசைப்படுத்தி, காலத்தால் இரண்டாம் இடத்தினராய் முதன்முதல் பதித்தலாகிய செய்கையால், மகாலிங்கையரோ டொப்ப முதலாம் இடத்தினராய சி. வை. தாமோதரம்பிள்ளையை, நான்காம் இடத்தினராக்கி, இராசகோபாலப்பிள்ளை பதிப்பையே தாமோதரம்பிள்ளை பார்த்து பதித்திருக்க வேண்டும் என்று, படிக்கிறவர்கள் உணரும்படி வைப்புக் கிரமம் செய்யாமற் செய்து,

செய்ந்நன்றி கொல்வோரும் இப்பூமிக்கு பாரமாய் உளராயின், அவர்தம் அதோகதிக்கு இரங்கி, (1868) விபவ வருஷத்திலும், ஏனைய வருஷத்திற்போலவே, கார்த்திகைக்கு முன் ஐப்பசி; ஐப்பசிக்கு முன் புரட்டாதி, என்று விரல்விட்டுக்காட்டுவதோடு, மாகாலிங்கையர் பதிப்பு 80 வருஷத்திற்கு முந்தியதன்று; நூறு வருஷத்திற்கு முந்தியது; தாமோதரம்பிள்ளை பதிப்புத்தான் 80 வருஷத்திற்கு முந்தியதென்றும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்

இனி அப்பாற் செல்வோம்.

“எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம்”

என்று ஒரு குரல் கடைச்சங்க காலத்துப் பாண்டிய அரசனொருவன் வாயிலிருந்து கேட்கின்றோம். கடைச்சங்கத்துத் தலைமைப் புலவோராகிய நக்கீரரே அக்குரலை பெருக்குகின்றார்.

இக் குரலில் தொல்காப்பியத்தின் உயிர் நிலையம் எந்த அதிகாரம் என்பதை எவருந் தொட்டுக்காட்டலாம். அந்த உயிர்நிலையமாகிய பொருளதிகாரம் 1868ம் ஆண்டு கழிந்து, 1878ம் ஆண்டும் போய், 1884ம் ஆண்டும் நீங்கி இன்னும் அச்சில் வெளிவரவில்லை. ஓர் இராசகோபாலப்பிள்ளையோ, ஒரு தொழுவூர் வேலாயுத முதலியாரோ, இவர்களின் சூத்திரப்பார்வையான வீராசாமி முதலியோ திருவுளம் இரங்கவில்லை! வெறுங்கைக்கு முழம் ஏது!

தமிழ்நாடு முழுவதிலும் பொருளதிகார ஏடு ஒருசிலவாய், அவையும் நெரிந்தும் முரிந்தும் சிதல்வாய்ப் பட்டும் சிதைந்து, இறுதி மூச்சு விடுவதைத் தமிழமகன் ஒரே ஒரு தாமோதரன் தான் கண்ணுற்றான்; கண்ணீர் சொரிந்தான். 1885ம் ஆண்டு பொருளதிகாரம், முதல் ஐந்தியல்கள் நச்சினார்க்கினியர் உரையோடும், பின்னான்கியல்கள் பேராசிரியர் உரையோடும் அச்சுவாகனம் இவர்ந்தது. தாமோதரம்பிள்ளை பதிப்புத் தமிழ்நாட்டில் பவனி வந்தது.

பல்காற் பழகினுந் தெரியா உளவேல்
தொல்காப் பியந்திரு வள்ளுவர் கோவையார்
மூன்றினும் முழங்கும்

அன்றோ!

நாவலர் பதிப்புக்களான திருவள்ளுவர் கோவையார் என்பவைகளோடு, தொல்காப்பியம் முழு உருத்தரித்துக், கைகோத்துக் குதூகலித்தது. தமிழ் அன்னை புன்னகை பூத்தாள்.

1891ம் ஆண்டில் பலருடைய வேண்டுகொளின்படி, மழைவை மகாலிங்கையர் பதித்த எழுத்து நச்சினார்க்கினியத்தை மிக அருகினமையால் திருப்பிப் பிள்ளை அச்சிட்டார். அடுத்த ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம் பிள்ளையால் முதன்முதல் அச்சிடப்பட்டது. எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் தவிர, சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப்பெல்லாம், மற்றொருவர் பதியாத புதிய பதிப்புக்களே.

“ஒருமுறையாயினும் பிறர் பிரசுரித்த நூல்களை மீள அச்சிடுவிக்காத எனக்கு இ்வ்வெழுத்ததிகாரம் ஒரு விலக்காயிற்று. அன்றியும் ஒரு பெருநூலின் முதலேயுள்ளதோர் சொற்ப பாகத்தை மாத்திரம் ஒருவர் பிரசுரஞ்செய்து காலகதியடைந்துவிட்டால், பின்னர் அந்நூல் முழுவதையும் அச்சிடுவோர் முதற் பாகத்தையுஞ் சேர்த்து அச்சிடுதல் தவறன்றாகும். உலக வழக்கும் அதுவே.”

என்ற பிள்ளையவர்களின் கூற்றுங் கரிபோக்கும்.

1881ல் வீரசோழியமும், 1883ல் தொல்-பொருளதிகாரத்திற்கு திறவுகோலான இறையனார் களவியல் உரையும், அவ்வாண்டில்தானே, சிவஞான சுவாமிகளின் மாணவரான கச்சியப்ப முனிவர் இயற்றிய தணிகைப்புராணமும், 1887ல் கற்றோரேத்துங் கலியும் உரையும், 1889ல் குட்டித் தொல்காப்பியமாகிய இலக்கண விளக்கமும், சூளாமணியும் பிள்ளை அவர்கள் அச்சிட்ட புத்தம் புதிய பதிப்புக்களே.

நா. பொன்னையா அவர்கள், மகா வித்துவான் கணேசையர் அவர்களின் மரபுநெறிப்பட்ட ஆன்ற அறிவை பயன்படுத்தி, சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் ஞாபகமாக, தற்காலத்து சனநாயகத் தமிழுக்குத் தலைக்கெட்டாத “கூடலினாயந்த ஒண்டீந்தமிழாவாய்” நுழைவார்க்கு அரியதொரு சாதகமாக, பிள்ளையவர்கள் பதித்த தெல்காப்பியம் முழுவதையும் நாற்பெருங் கூறிட்டு, அழகிய முறையில் அச்சிட்டுபகரித்து, பழந் தமிழறிஞர்கள் பாராட்டியமையாது.

திரு. பொன்னையா அவர்கள் தேச கைங்கரியங்கள் செய்து வருவதையிட்டு அரசாங்கம் ஜே.பி ஆக நியமித்திருக்கின்றது. நான் அவர்களுடைய சாஸ்திர கைங்கரியங்கள் குறித்து, “வராகம்” என்கின்ற பட்டத்தை வழங்க விரும்புகின்றேன்.

விஷ்ணுவின் பத்த அவதாரங்களில், கற்கி (கல்கி) அவதாரம் போல, “வராகம்” என்பதும் ஒரு விஷ்ணு அவதாரம். அறிவுப் பொக்கிஷங்களாகிய தொல்காப்பியம் போன்ற நூல்களை அசுரர்கள் சிதைத்து ஆழ்த்தும் காலங்களிலே, விஷ்ணு வராக மாய்த் தோன்றித், தனது வக்கிர தந்தங்களில், ஆழ்த்திய அறிவுப்பொக்கிஷங்களை தேடி எடுத்து, ஏந்தி உபகரிப்பது புராணப் பிரசித்தம்.

தொல்காப்பியம் சிதைந்து மறையுங் காலத்தில் அதனைத்தேடி எடுத்து ஏந்திப் பரமோபகராஞ் செய்த சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் ஆதிவராகம். பிறகு தாமோதரம்பிள்ளை எடுத்து ஏந்திய தொல்காப்பியம் மறைகிற சமையத்திலே, நன்றிமறவாமல் அதனை எடுத்துத் தாங்கிப் பயன்படுமுறையில் உபகரித்த திரு. பொன்னையா அவர்கள் “உத்தரவராகம்”.

திரு. நா. பொன்னையா அவர்கள் செய்த புண்ணியத்தோடு புண்ணியமாக, சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப்புக்களில், பிள்ளை அவர்கள் எழுதிய பதிப்புரைகளை ஒன்றுசேர்த்து, ஒரு தக்க முன்னுரையோடும் அடிக்குறிப்புக்களோடும் வௌியிட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகின்றேன். பிள்ளை அவர்களின் பதிப்புரைகள், தமிழ் வரலாறு தமிழ்நாட்டு வரலாறுகளையும், அவற்றில் பிள்ளை அவர்களின் பங்கையும் புலப்படுத்துவதேயன்றி, உயரிய வகுப்புக்களுக்கு வரலாற்றுப் பாடமும் தமிழ் இலக்கியமுமாய் அமைந்து பயன்படுமென்பதைச் சொல்லவேண்டியதில்லை.

இந்த கட்டுரையை எழுதுவதற்கு 1948ம் ஆண்டு ஒரு சந்தர்ப்பம் திடீரென்று தோன்றியது. ஆனால் கரு உருவெடுக்கவில்லை. இத்தனை காலங்கழித்துக் குழந்தை பிரசவித்திருக்கிறது. தொல்காப்பிய பராமரிசர்கள், இந்தக் குழந்தையையும் பரிசித்து கொஞ்சிக் குலாவுவார்களாக.

6-9-50

3 ஆவணி, 2011

தமிழ்தந்த தாமோதரம்பிள்ளையின் பரமோபகாரம்

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை – ஈழகேசரி: ஞாயிறு, 17-09-1950

இற்றைக்கு நூறு வருடங்களின் முன்னே, 1847ம் ஆண்டு பிலவங்க ௵ ஆவணி ௴ முதன் முதல் மழைவை மகாலிங்கையர் அவர்கள் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு அச்சிற் பதிப்பித்தார்கள். பன்னீராயிர வருச காலம் கற்றோர் மனதிலும் ஏட்டுச் சுவடிகளிலும் இருந்து வந்த தொல்காப்பிய மூலத்்தில் எழுத்ததிகாரமும், பலநூறு வருசங்களாக அவ்வாறு இருந்து வந்த நச்சினார்க்கினியர் உரையும் அச்சுவாகனமேறின.

அந்த மகாலிங்கையர் அவர்கள் தாம், ஆறுமுக நாவலர் அவர்கள் நாவலர் பட்டம் பெறமுன், இளமைப்பருவத்தில் பார்சிவல் பாதிரியாருக்கு நல்ல நடைப்படுத்திக் கொடுத்த பைபிளை, சென்னைப் புலவர்கள் அமைத்த நடையிலும் சிறந்ததென்று வியந்து நாவலர் அவர்களையும், அவர்கள் பிறந்த யாழ்ப்பாணத்தையும் பாராட்டினவர்கள். மகாலிங்கையர் அவர்கள் பழுத்த தமிழ் அறிஞர். அவர்களைப்போல அக்காலத்திருந்த வேறு இரு அறிஞர்கள், விசாகப்பெருமாளையர், சரவணைப்பெருமாளையர் என்பவர்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள். கந்தப்பையர் என்பவரின் புத்திரர்கள். கந்தப்பையர் சிறந்த வித்துவான்; சிவாஞானசுவாமிகளின் மாணவரான தணிகைப்புராணம் பாடிய கச்சியப்ப முனிவரின் மாணவர். விசாகப்பெருமாளையர் மூத்தவர். நாவலர் அவர்கள் ஒரு சமயம் விசாகப்பெருமாளையரை மெய்புலவர் என்று பாராட்டியிருக்கின்றார்கள். அன்றி நேரிலும் சந்தித்து அடிக்கடி சம்பாஷித்துமிருக்கிறார்கள். விசாகப்பெருமாளையர், இளமையில் தந்தையாருடன் சென்று — தந்தையாரின் குரு கச்சியப்ப முனிவர், முனிவரின் குரு சிவஞானசுவாமிகள் — சுவாமிகளை வணங்குபவர். சுவாமிகளின் பெருமையை நன்கு தெரிந்தவர். பல வரலாறுகள் சிவஞானசுவாமிகளைப்பற்றி நாவலர் அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றார். இழவுகளிற் சந்தேகமானவர்கள் — ளகர ழகர பேத சந்தேகங்கள் — விசாகப்பெருமாளையரோடு சம்பாஷித்தால், எளிதிற் சந்தேகம் தீர்த்துக்கொள்ளலாமென்று நாவலரவர்கள் விசாகப்பெருமாளையரின் உச்சரிப்பை அடிக்கடி பாராட்டுவார்களாம். இது நிற்க,

மகான் மகாலிங்கையர் அவர்கள் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் பதிப்பித்து இருபது ஆண்டுகள் கழிந்தும், ஏனைய அதிகாரங்கள் தமிழுக்கு இன்றியமையாதனவும், தலைசிறந்தனவுமாம் என்பதை அறிந்து வைத்தும், தமிழ்நாட்டுப்புலவர்கள் அவற்றை அச்சிற் பதிப்பிக்க முன்வரவில்லை. அவர்கள் முன்வராமைக்குப் பொருண் முட்டுப்பாடு ஒரு காரணமேயாயினும், தொல்காப்பியந் தொலைந்தாலும் தமது புகழ்க்காப்பியந் தொலையக்கூடாதென்ற அந்தரங்க எண்ணமே முக்கிய காரணமென்பது கருதத்தக்கது. இந்த பைத்திய நிலையில் ஆங்கில மோகமும் அதிகரிக்கத் தொல்காப்பியப் பிரதிகள் வரவர அருகித் தமிழ்நாடு முழுவதிலும் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் சுருங்குவதைத் தமிழ்த் தாமோதரம்பிள்ளை கண்டார்; கண்ணீர் வடித்தார். தமக்கு வரும் அவமானங்கள் ஏளனங்களுக்கு இளைக்காது, தமிழ் அன்னைக்குப் பிராணவாயுப் பிரயோகஞ் செய்ய முன்வந்தார்; தொல்காப்பியக் கடலில் இறங்கினார். சென்னைத் தமிழ் வித்துவச் சூடாமணிகள் சிலர், தாமோதரம்பிள்ளை இமாசலத்தையும் கங்கையையும் யாழ்ப்பாணம் கொண்டு போகப்போகின்றார் என்று சிரித்தார்கள்.

1868ம் ஆண்டு புரட்டாதி மாதம் இற்றைக்கு எண்பது வருடங்களுக்கு முன் முதன் முதல் தமிழ் மன்னன் தாமோதரம்பிள்ளை, தமிழ்நாடு உய்யும்பொருட்டுத் தொல்காப்பியம் சொல்லதிகாரத்தைத் தலைசிறந்த உரையாகிய சேனாவரையர் உரையோடு, நாவலர் அவர்களை கொண்டு பரிசோதிப்பித்து, அச்சிற் பதிப்பித்தார். 1868ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ம் தேதி முதல் சென்னைத்தினவர்த்தமானியில் தொடர்ந்து சேனாவரையப்பதிப்பைப் பற்றிய விளம்பரம் வந்தது.

சூரியநாராயண சாஸ்திரியார் “தாமோதரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்ற எவர் தாமோதரம்” என்றும், வேதநாயகம்பிள்ளை “கோடிபுலவர்கள் கூடினும் நின்புகழ் கூறரிதே” என்றும் பிள்ளையைப் புகழ்ந்து பாடினார்கள். மனொன்மணியம் சுந்தரம்பிள்ளை, கலாநிதி பூண்டி அரங்கநாத முதலியார், செஷைய சாஸ்திரி, சேர். பொன். அருணாசலம், தமிழ் தெரிந்த ஹைகோட் நீதிபதிகள், ஜமீந்தார்கள், மகாராசாக்கள் முதலிய பிரபலஸ்தர்கள் குதூகலித்தார்கள். ஶ்ரீலஶ்ரீ சுப்பிரமணிய தேசிகர் முதலிய மடாதிபதிகள் திருநோக்கஞ்செய்தார்கள்.

ஆனால், வித்துவசூடாமணிகளான கோபாலபுரம் இராசகோபாலப்பிள்ளை, தொழுவூர் வேலாயுதமுதலியார் என்பவர்களுக்கு அடிவயிற்றிலே அக்கினிச்சூடாமணி வேலைசெய்யத் தொடங்கிற்று. அந்த அழுக்காற்று மன்னர்கள் திரை மறைவில் நின்று, நரசிங்கபுரம் வீராசாமி முதலியாரை கிள்ளிவிட்டார்கள். இந்த வீராசாமி முதலியார் யாவரோ என்றால், அவர்தாம் இன்னாரென்று இதோ விளம்புகின்றேன். இவர், இராமலிங்கசுவாமியின் முதற்சீடர். அருட்பாப்புராணத்தில், “தவக்கொழுந்து” என்று புகழப்பட்டிருக்கின்றார். இராமலிங்கரின் அடுத்த வாரிசு இவரேயென்று சுத்தானந்தபாரதியார் முழங்குகின்றார். இந்த வீராசாமி முதலியார் யாழ்ப்பாணத்தையும், நாவலரையுந் திட்டி பன்னிரண்டு நூல்கள் அருளியிருக்கின்றார். “தீவாந்தர சைவவிநோதம்” என்ற நூலிலே நாவலரை படு கிறீஸ்தவர் என்றும், நாவலருக்கு கிறீத்தவப்பெயர் “பைராட்” என்றும் வாய்க்கு வந்தபடி வர்ணித்திருக்கின்றார். இந்த அருட்பாப் புலவராகிய வீராசாமி முதலியார், அந்த இரு இலக்கண மேதைகளின் உதவிகொண்டு, தாமோதரம்பிள்ளையின் சேனாவரைய விளம்பரத்தில் இலக்கணப்பிழைகள் கண்டுபிடித்து, “இலக்கண இலக்கியங்களில் மகாவல்லவரும், சென்னை முதல் ஈழமீறாகவுள்ள தமிழ்நாட்டு வித்துவான்களில் தமக்கு இணையில்லாதவருமாகிய” என்ற நாவலர் அவர்களுக்குத் தாமோதரம்பிள்ளை கொடுத்த விஷேடணத்தை ஆஷேபித்து, “இணையில்லாதவர்” என்பதற்குப் “பெண்சாதியில்லாதவர்” என்று மெய்ப்பொருள் பண்ணி, தமோதரம்பிள்ளையையும் நாவலரையும் தூஷித்து, 1869ம் ஆண்டு பிப்பிரவரி மாதத்திலே “விஞ்ஞாபனப் பத்திரிகை” என்று ஒரு தூஷணப் பத்திரிகை வௌியிட்டிருக்கின்றார்.

தாமோதரம்பிள்ளை கறையான் வாயிலிருந்து சேனாவரையத்தை மீட்டு வௌியிட்டதற்கு, இராசகோபாலப்பிள்ளை முதலிய சென்னைப்பண்டிதமணிகள் சிலர் செய்த கைம்மாறு, “பெண்சாதி” நியாயம் பேசும், இந்த “விஞ்ஞாபனப் பத்திரிகை”த் தூஷணந்தான்.

இந்த இராசகோபாலப்பிள்ளை, ஒருவர் பதித்த புத்தகத்தில் நாலு ஆறு பக்கங்களை மாற்றி, முகப்பை புதிது பண்ணித் தாமும் ஒரு பதிப்புப் பண்ணியதாகப் பாசாங்கு செய்ய வல்லவர்; கை வந்தவர். அவருடைய யோக்கியதை அவர் தேசத்தாராகிய கூடலூர்க் குமரகுருபர சுவாமிகள் இயற்றி அச்சிற் பதிப்பித்த “பரமோத்தர ராசா பாச தருப்பணத்”தில், 35ம், 36ம் பக்கங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். அது வருமாறு:-

“இராசகோபாலப்பிள்ளை திருத்தி யச்சிற் பதிப்பித்த புத்தகத்தை பாராதீர். ஏனெனில், அவர், முதனூற் கருத்தறியாதவராகையால், வில்லிபுத்தூராழ்வார் செய்த பாரதத்தைப், பெரியோர் செய்த வாக்கை அழிக்க்கூடாதென்று சிறிதும் அஞ்சாது, சிவபரமாயிருந்த பாடல்கள் அனேகத்தைத் தள்ளியும், சில அடிகளை மாற்றியும், சில சொற்களைத் திரித்தும், மனம்போன வாறே அச்சிற் பதிப்பித்தனர். ஆதலால், அதனை நீக்கி வில்லிபுத்தூரர் பாடினபடியே ஆறுமுக நாவலர் அச்சிற் பதிப்பித்திருக்கும் புத்தகம் ஒன்று சம்பாதித்துப் பாரும் பாரும். உமது சந்தேகம் தீரும் தீரும். நாவலர் என்னும் பட்டம் அவருக்குத் தகுமேயன்றி உமக்கெல்லாமா தகும்! புலியை நோக்கிப் பூனை சூடிக்கொண்டால் புழுத்துச் சாமேயன்றிப் புலியாமா! அதுபோலக் கல்விக் கடலாகிய ஆறுமுக நாவலரை நோக்கி நீரும் அப் பெயர்தரித்துக் கொண்டாற் பழியும் பாவமும் அடைவீரேயன்றிப் புகழ் அடைவீரா! அடையீர் அடையீர்.”

இத்துணைப் பெருஞ் சிறப்பினராய இராசகோபாலப்பிள்ளை யாழ்ப்பாணத்தில் எங்கேயோ ஒரு மூலைமுடக்கிலிருந்து வந்த தாமோதரம்பிள்ளை சென்னை மாநகரில் வீற்றிருந்து கொண்டு, அதுவும் ஒப்புயர்வில்லாததொரு சேனாவரையம் பதிக்கப் பார்த்துக்கொண்டிருப்பதா? மனிதர் ஒரு சூழ்ச்சி செய்தார். நினைக்க முடியாத சூழ்ச்சி; திகைக்கக் கூடிய சூழ்ச்சி. அஃதாவது தம் பெயராலும், ஒரு சேனாவரையப் பதிப்பு வழங்க ஒரு முயற்சி செய்தார். சிலர் இன்னுந்தான், இராசகோபாலப்பிள்ளையும் சேனாவரையம் பதித்தார் என சொல்லப்பார்க்கின்றார்கள். அப்படியொரு பதிப்பு தமிழ்நாட்டில் வழங்கியதாக… வழங்குவதாகத் தெரியவில்லை. சென்னை அரசாங்க புத்தகப் பதிவில், சி. வை. தாமோதரம்பிள்ளை சேனாவரையம் பதித்தார் என்று இருக்கின்றதேயன்றி, இராசகோபாலபிள்ளை பெயரேயில்லை. சென்னை சர்வகலாசாலையில் தமிழப் பகுதி முக்கியஸ்தர்களான திரு. வையாபுரிப்பிள்ளை முதலியவர்கள், இராசகோபாலப்பிள்ளை சேனாவரையம் பதிப்பித்ததாக தாங்கள் கேள்விப்பட்டதுமில்லை; அப்படி ஒரு பதிப்பை கண்டதுமில்லை என்கின்றார்கள்.

வளரும்…..

28 ஆடி, 2011